வீக் எண்ட்.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்..!

எஸ்இடிசி மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மே 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், 10 மற்றும் 11 (சனி, ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சிக்கு 9ஆம் தேதி 650 பேருந்துகளும், 10ஆம் தேதி 665 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 9ஆம் தேதி 100 பேருந்துகளும் 10ம் தேதி 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 9ஆம் தேதி 24 பேருந்துகளும், 10ஆம் தேதி 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 11ஆம் தேதி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 950 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “9ஆம் தேதி 11,841 பயணிகளும், 10ஆம் தேதி 7,385 பயணிகளும், 11ஆம் தேதி 11,070 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.