வெதர்மேன் கொடுத்த அலெர்ட் : ஆகஸ்ட் மாதம் மழையா? வெயிலா?
ஆகஸ்ட் மாதத்திற்கான விரிவான வானிலை அறிக்கைகள் குறித்து டெல்டா வெதர்மேன் தனது யூட்யூப் தளத்தில் அலெர்ட் கொடுத்துள்ளார்.
அதில், ஜூலை மாதத்தில் பெரும்பாலும் வெப்பமான நாட்களும், மழைப்பொழிவு குறைந்தும் காணப்பட்டது என்று தெரிவித்த டெல்டா வெதர்மேன், ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் இயல்பிற்கு மிகுதியான மழைப்பொழிவை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக முதல் இரண்டு வாரங்கள் வெப்பச்சலன மழை தீவிரமடைந்து இயல்பிற்கு மிகுதியான இடிமழையை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2ஆகஸ்ட் 2ம் தேதி முதல் படிப்படியாக துவங்கி தீவிரமடையும் என்றும், ஆகஸ்ட் 3 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் வட கடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 4ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்ககடலில் காற்று சுழற்சி உருவாகி ஆந்திர நிலப்பரப்பு நோக்கி நகரக்கூடும் என்றும், ஆகஸ்ட் 18 முதல் 31க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் கேரளா, கர்நாடகா, மேற்குதொடர்ச்சிமலையோர மாவட்டங்களில் தீவிரமடையும் எனவும், ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் மாதம் இயல்பிற்கு அதிகமாக மழையும், இயல்பான வெப்பம் என்று அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் 3ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரீரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)