1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க.வுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என மன உறுத்தல் எங்களுக்கு உள்ளது : செல்லூர் கே.ராஜூ பேட்டி..!

1

மதுரை மேற்குசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கீழமாத்தூர் நாகதீர்த்தம் பகுதியில் நிலையூர் கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டுவதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், பகுதி செயலாளர் வி.கணேசன், துவரிமான் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது- அ.தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை. தி.மு.க. தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு பணத்தை வழங்குகிறது.தி.மு.க. புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தியும், ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்து வைத்து பணம் கொடுத்தது. மு.க.ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறார்.

இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களா? ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்தே விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை.தமிழகத்தில் தி.மு.க.விற்கு செல்வாக்கு கூடியுள்ளது என்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும். தி.மு.க. கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மக்களை விலைபேசி வாங்கப்பெற்ற வெற்றியாகும்.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு கொள்கை கிடையாது.

தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.தி.மு.க. ஆட்சியில் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை மக்களின் மனநிலை மாறக்கூடியது.தி.மு.க. எத்தனையோ இடைத்தேர்தல் புறக்கணித்து உள்ளதே?, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.  தனித்து போட்டியிட்டால் அ.தி.மு.க.வும் தனித்து போட்டியிடும். ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்த காலகட்டத்திலும் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.

தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து விட்டது என கூற முடியாது.எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்த காலத்திலும் பாரதி ஜனதா கட்சி தமிழகத்தை ஆள முடியாது.

பா.ஜ.க. தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் வெற்றி பெற முடியாது.எம்.ஜி.ஆர். போல சம்பாதித்த பணங்களை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் நடிகர் விஜய், நடிகர் விஜய் எனும் இளைஞர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும்.நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like