நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பது தான் முடிவு : எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. நான் தான் தெளிவாக கூறி வருகிறேனே.. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது எங்கள் உரிமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன் பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு. பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வரும் தேர்தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் போட்டியிட இருக்கிறோம்.
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்துதான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி இருக்கும்.
அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு ஒருபோதும் இருக்காது. கூட்டணியில் இணைவதன் மூலம் இருதரப்புக்குமே பலனிருக்கிறது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்சியில் எத்தகைய பங்கு என்பதும் பின்னர்தான் பேசப்படும்” என்று அமித் ஷா பேசியிருந்தார்.
அமித் ஷாவின் பேச்சை வைத்து இன்றுவரை அதிமுக பாஜகவிடம் தன்னை அடகுவைத்துவிட்டது, பாஜக தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து எடப்பாடி பழனிசாமியும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், இன்றும் அதுபற்றி கேள்வி எழுப்பப்பட அவர் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.