நாங்கள் இருக்கிறோம்.. தந்தை, மகனுக்காக 2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிமாறன் பதிவிட்ட ட்வீட் !
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நீதிமன்றத்தில் கூறிய புகாருக்கு பிறகு இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயராஜும், பென்னீஸும் விடிய விடிய சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கப்பட்டனர் என்பதை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதற்கு நேரடி சாட்சியாக 19ஆம் தேதி இரவு காவல் நிலையத்தில் தலைமை காவலர் ரேவதி இருந்துள்ளார். சக போலீஸாரின் நடவடிக்கைகளால் அதிர்ந்து போயிருந்தார் அவர். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட் உறுதி அளித்த பின்னர் தான் அவர் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நியாயத்தின் பக்கம் நிற்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உண்மையை தைரியமாக வெளிக்கொண்டு வர சாட்சி அளித்த தலைமை காவலர் ரேவதி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள்.
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 2 வருடங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவையும் பதிவிடாத வெற்றிமாறன் சாத்தான்குளம் விவகாரம் குறித்து தற்போது பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Honourable judges P. N. Prakash, P. Pugazhendhi, magistrate Bharathidasan, courageous Revathi, you’ve given us hope. We stand by you.
— Vetri Maaran (@VetriMaaran) June 30, 2020