கவர்னர் மாளிகையின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., நாட்டின் 77-வது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மிகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது. ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு கவர்னர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.
'நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று பொதுவெளியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழக மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.
தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், கவர்னர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, (ஆக.14) கடிதம் அனுப்புகிறேன்.
தமிழக மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுகதான். பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், இதன் உச்சமாக தமிழக மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக (இன்று) ஆகஸ்ட் 15 அன்று, கவர்னர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கிடையே தி.மு.க.வை தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கவர்னர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அந்த கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசனும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.