சென்னை அருகே வெள்ள நீரில் வந்தது முதலையா? - மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்

தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்துவாங்கி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. ஏராளமான பாதிப்புகள், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வெள்ள நீரில் முதலை ஒன்று வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக வீடியோ, புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு சென்றது.
இதனையடுத்து உடனடியாக முதலை வெள்ள நீரில் வந்ததா என விசாரணை நடத்தப்பட்டது. அதன்முடிவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அங்கு தண்ணீரில் மிதந்து வந்தது மரக்கட்டை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்ததை முதலை என வதந்தி பரப்பி வருகின்றனர், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், குடியிருப்பில் முதலை மிதந்து தொடர்பான புகைப்படம் தாய்லாந்து நாட்டில் எடுக்கப்பட்டது என்றும் தகவல் கூறப்படுகிறது.
newstm.in