வாரன் பபெட் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு..! அடுத்த தலைமை பொறுப்பு யாருக்கு?

94 வயதாகும் வாரன் பஃபெட், 2021 ஆம் ஆண்டிலேயே கிரெக் ஏபெலை தனது வாரிசாக நியமித்திருந்தார். இருப்பினும், நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து பஃபெட்டின் நேரடியான கருத்தை மீண்டும் ஒருமுறை கேட்க பங்குதாரர்கள் ஆர்வமாக இருந்தனர். கூட்டத்தின் இறுதி சில நிமிடங்களில் பஃபெட் பேசுகையில், நாளை பெர்க்ஷயர் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடைபெற உள்ளது. குழுவில் 11 இயக்குநர்கள் உள்ளனர். எனது குழந்தைகள் ஹோவி மற்றும் சூசி ஆகிய இரு இயக்குநர்களுக்கும் நான் அங்கு என்ன பேசப் போகிறேன் என்பது தெரியும். மற்றவர்களுக்கு இது புதிய செய்தியாக இருக்கும். ஆனால், கிரெக் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
1965 ஆம் ஆண்டில், வாரன் பஃபெட் நஷ்டத்திலிருந்த நியூ இங்கிலாந்து ஜவுளி ஆலையை வாங்கினார். கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் கெய்கோ காப்பீடு முதல் பிஎன்எஸ்எஃப் ரயில்வே வரை பல்வேறு வணிகங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான கூட்டு நிறுவனமாக பெர்க்ஷயர் ஹாத்வேயை மாற்றினார். பெர்க்ஷயர் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ள இந்தச் சூழ்நிலையில், பஃபெட் தனது கட்டுப்பாட்டை ஒப்படைக்கிறார். தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட $1.2 டிரில்லியனாக உள்ளது.
"ஒமாஹாவின் ஞானி" என்று அழைக்கப்படும் பஃபெட், தான் இன்னும் நிறுவனத்திற்கு உதவ முன்வருவார் என்று கூறினார். ஆனால், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மூலதனப் பயன்பாடு தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம், தற்போது பெர்க்ஷயரின் காப்பீட்டு அல்லாத செயல்பாடுகளின் துணைத் தலைவராக இருக்கும் 62 வயதான கிரெக் ஏபெலிடம் இருக்கும். சில சமயங்களில், சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது அல்லது நிறுவனம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது, நான் உதவியாக இருப்பேன் என்று நம்புகிறேன் என்று பஃபெட் மேலும் தெரிவித்தார்.