1. Home
  2. தமிழ்நாடு

வேலூருக்கு வந்த வார்னிங்..! இன்று முதல் 5 நாள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!

1

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛தமிழ்நாட்டில் 10.04.2025 முதல் 14.4.2025 வரை வடமாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் 10.4.2025 முதல் 14.4.2025 வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* தாகம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

* லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுகை ஆடைகள், நூற் துணி, பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.

* வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்து கொள்ள வேண்டும்.

* மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும்.

* இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாதநீர், எலுமிச்சை சாறு, மோர், ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகவும் கேட்டு கொள்ளப்படுகிறது

* வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது கையோடு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

* கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

* கர்ப்பிணி பெண்கள் காலை 10 மணி மதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கையில் குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.

* மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* அதிக புரதம்/மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோ்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* வயதானவர்கள்/குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர். எனவே இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் மூடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம்.

மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like