1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் போர் ஒத்திகை..!

Q

தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஒத்திகை, உடனடி போர் வருவதற்கான அறிகுறி அல்ல. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் கால ஒத்திகை என்பது போர், ஏவுகணை தாக்குதல் அல்லது வான்வழி தாக்குதல் போன்ற அவசர காலங்களில் மக்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோதிக்கும் ஒரு பயிற்சி ஆகும். இந்த ஒத்திகையில் உண்மையான சூழ்நிலைகளை போல் உருவாக்கப்படும்.

நகரங்களில் விளக்குகள் அணைக்கப்படும். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுவது எப்படி என்று பயிற்சி எடுப்பார்கள். அவசர குழுக்கள் உடனடியாக செயல்படும். இந்த பயிற்சிகள் பதட்டத்தை குறைக்கவும், குழப்பத்தை தவிர்க்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், உயிர்களை காப்பாற்றவும் உதவும்.

இந்த ஒத்திகைகள் பனிப்போர் கால முறைகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நேரத்தில், நாடுகள் air raids எனப்படும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் அணு ஆயுத தாக்குதல்களுக்கு தயாராக இருந்தன. அப்போது Air raid sirens எனப்படும் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். Blackout எனப்படும் மின் தடை மற்றும் வெளியேற்ற பயிற்சிகளை மேற்கொண்டன. Blackout நேரத்தில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

நாளை நடக்கும் ஒத்திகையின் போது, தற்காலிகமாக மின் தடை ஏற்படலாம். மொபைல் சிக்னல்கள் துண்டிக்கப்படலாம் அல்லது போக்குவரத்து மாற்றப்படலாம். சில பகுதிகளில், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கி பயிற்சி செய்யலாம். இதனால் மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். தண்ணீர், மருந்துகள் மற்றும் டார்ச் லைட் போன்ற அடிப்படை பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பக்கூடாது. மின்சாரம் அல்லது இணையம் சிறிது நேரம் தடைபட்டால் பதட்டப்பட வேண்டாம். வானொலி அல்லது அரசு சேனல்களில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒத்திகையை ஒரு தயார்நிலை பயிற்சியாக கருத வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. இதன் முடிவுகளை மதிப்பீடு செய்து, தேவைப்பட்டால் மேம்படுத்தலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள்

நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில், மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த பயிற்சிகள் நடத்தப்படும். சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள், Home Guards எனப்படும் ஊர்க்காவல் படையினர், NCC எனப்படும் தேசிய மாணவர் படை, NSS எனப்படும் தேசிய சேவை திட்டம், NYKS எனப்படும் நேரு யுவ கேந்திர சங்கதன் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள்.

ஒத்திகை முடிந்த பிறகு, ஒவ்வொரு மாநிலமும், மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதில் நடந்த நிகழ்வுகள், குறைபாடுகள் மற்றும் பரிந்துரைகள் இடம்பெற வேண்டும். சில பகுதிகளில் ஏற்கனவே ஒத்திகை பயிற்சிகள் தொடங்கிவிட்டன. பஞ்சாப்பில் உள்ள Ferozepur Cantonment-ல் ஞாயிற்றுக்கிழமை மாலை 30 நிமிடம் Blackout பயிற்சி நடந்தது. இது இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த பகுதி அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு அவசியம்

இந்தியாவின் போர் கால ஒத்திகை நாளை நடைபெற உள்ளது. இது 54 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. 1971 -ம் ஆண்டு கடைசியாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நடந்த போது இந்த ஒத்திகையானது மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்த பயிற்சிகள் பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு அவசியம்

Trending News

Latest News

You May Like