ஊரடங்கை மீறினாரா? - மனிதநேயம் வேண்டாமா? - ஆட்டோ ஓட்டுநரிடம் வருத்தம் தெரிவித்த போலீஸ் அதிகாரி !
தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை கட்டணம் வசூலிக்காமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது மதுரை கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கை மீறி ஆட்டோ இயக்கியதற்காக 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் எவ்வளவு சொல்லும் அவர்கள் கேட்பதாக இல்லை.
இதனால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணிக்கு உதவி சென்ற இடத்தில் போலீசார் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை தனது வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் வெளியிட்டார் . அந்த வீடியோவானது இணையத்தில் வைரலானது.
இதைக்கண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக தொடர்பு கொண்டு அவரிடம் காவலர்கள் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்ததோடு அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் ரத்து செய்தார்.
newstm.in