1. Home
  2. தமிழ்நாடு

விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பு : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

Q

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி டெல்லியில் நேற்று (பிப்.24) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது தமிழக காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது என்று தனது விலகலுக்கான காரணங்களை விஜயதரணி அடுக்கியிருந்தார்.
இதனையடுத்து, பாஜகவில் இணைந்த விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு விஜயதரணி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்திலும் விஜயதரணி பகிர்ந்துள்ளார்.
3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், நேற்றைய தினம் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், விஜயதாரணியின் ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். விஜயதாரணியின் பதவி விலகல் கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலி என அறிவித்த பின் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like