யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை விஜய் வெளியிடுகிறார். அவருக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை - அமைச்சர் சேகர்பாபு..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, “சென்னை மாநகராட்சி வார்டு 37 இல் உதயசூரியன் நகரில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்த உடன் அந்த பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்டோர் சென்று பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இன்றைக்கு ரூபாய் 8000 ரூபாயும் 10 கிலோ அரிசி வேட்டி புடவை உள்ளிட்ட பொருட்கள் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக 42 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் 26 கிலோ அரிசி மற்றும் மாற்று உடைகள் வழங்கப்பட்டுள்ளது
அந்த இடம் என்பது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமானது. அங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்த 400 குடும்பங்களுக்கும் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்” என்று பேசினார். மேலும் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பச்சை பொய் பழனிச்சாமி என பெயர் வைத்துள்ளோம். அவர் வாயில் வந்ததை எல்லாம் சொல்கிறார். என்னதான் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளித்ததால் தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்ஐடி என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை. அவர்கள் முறையாக விசாரணை செய்தனர். அரசு வழக்கறிஞரும் சேர்ந்து ஐந்தாண்டு இழுத்தடிக்கப்பட்ட பொள்ளாச்சி சம்பவம் போன்று இல்லாமல் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. முதலமைச்சரை பாராட்ட மனமில்லை என்றாலும் வசை பாடுவதை தவிர்த்தால் குற்ற சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஊக்கமாக இருக்கும்.
யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை விஜய் வெளியிடுகிறார். அவரது ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் மக்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். 2026 களத்திற்கு வரட்டும் மக்கள் அப்போது என்ன தீர்ப்பை வழங்குகிறார்கள் என்பது தெரியும்.
முதலமைச்சர் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்கிறார். மக்களோடு கூட்டணி வைத்து மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் பி டீம் ஆக நாங்கள் செயல்படவில்லை.