விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை...திமுகவை வீழ்த்த விரும்பினால் பாஜகவிற்கு வரலாம் - இராம ஸ்ரீனிவாசன்..!

மத்திய அரசு நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அவர் பேசுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரியாகவும் கணக்கெடுப்பு எடுக்கப்பட இருக்கிறது என்றார். இந்த பணி அடுத்த ஆண்டு துவங்க உள்ளது. இந்தியாவின் முதல் ஓபிசி பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பாரத பிரதமர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றும் கூறினார்.
இன்றைய சூழலில் சாதி வாரியாக கணக்கெடுப்பு தேவை என்பதை உணர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.நீதிக்கட்சி ஆட்சியில் தான் DND பிரிவினர் குற்ற பரம்பரை என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நீதிக்கட்சியில் இருந்து வந்த திமுக இன்று சமூகநீதி பற்றி பேசுகிறது என்று விமர்சித்தார். காங்கிரசுடன் கைகோர்த்துள்ள திமுக, மன்மோகன் சிங் ஆட்சியில் ஏன் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியது போல, கணக்கெடுப்பு பணிகள் அடுத்த ஆண்டு துவங்கும். சாதி வாரியாக கணக்கெடுப்பு முடிய ஒரு வருடம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு சர்வே முறையில் கண்மூடித்தனமாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் கணக்கெடுப்பு நடத்தும் என்றார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி துல்லியமாக கணக்கெடுப்புகள் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திடீரென சமூக நீதி மீது அக்கறை வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்று இராம ஸ்ரீனிவாசன் கூறினார். அன்று காங்கிரஸ் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவழித்து சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஒதுக்கிய நிதி என்ன ஆனது என்று மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட உள்ளது என்றார்.திருமாவளவன் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை கூற வேண்டும் என்று இராம ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார். அவர் ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுப்பவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.விஜய்யுடன் NDA கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்று தனக்கு தெரியாது என்று இராம ஸ்ரீனிவாசன் கூறினார். ஆனால், "திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தால் பாஜகவிற்கு வரலாம் அவரை நாங்கள் வரவேற்கிறோம்" என்று அழைப்பு விடுத்தார்.மற்ற கட்சிகளில் எல்லாம் இளைஞர் அணி தான் இருக்கும். ஆனால், விஜய் கட்சியில் குழந்தைகள் அணி, பாப்பா அணிகள் தான் உள்ளது என்று கிண்டலாக பேசினார்.
"கூட்டம் வேற ரசிகர் வேற அரசியல் அனுபவம் இல்லாததால் விஜய்க்கு அது இப்போது புரியாது தேர்தலுக்கு பிறகு விஜய் அதை புரிந்து கொள்வார்" என்றும் கூறினார். கமலஹாசனுக்கு கூட்டம் கூடவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். 1984ல் கலைஞருக்கு எம்ஜிஆரை விட கூட்டம் அதிகமாக கூடியது. ஆனால், அந்த தேர்தலில் கலைஞர் தோற்றுப் போனார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும் NDA கூட்டணிக்கு வரலாம் என்றும் இராம ஸ்ரீனிவாசன் அழைப்பு விடுத்தார்.