ஊட்டியில் ஏப்.,25, 26ம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு..!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில், பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும். துணை வேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் பேச உள்ளனர்.
ஏப்ரல் 25ம் தேதி மாநாட்டை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைப்பார். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் சிறப்பு உரையாற்ற உள்ளார். மாநாட்டில் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தனியார் பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர்.
திறன் மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உயர் கல்வியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.