தமிழகத்தில் 'வெற்றிவேல் வீரவேல்' ஆபரேஷன் நடத்தப்படும்- நயினார்..!

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும்.
பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தெலுங்கானா காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்க காரணம் கணவனை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியாது. அதனால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது போன்ற வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம்.
பா.ஜ.க.வில் இருந்து திருமாவளவனுக்கு நான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். மற்றவர்கள் யாரும் பேசினார்களா என தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.