தடுப்பூசி போடலைனா சம்பளம் கிடையாது – அதிரடி அறிவிப்பு!!

பஞ்சாபில் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவேற்றினால் தான் சம்பளம் வழங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் அரசு ஊழியர்கள் சம்பள விநியோகம் மற்றும் அவர்களின் ஓய்வு காலப் பணிக்கொடைகள் தொடர்பான சிக்கலகளைக் களைய உருவாக்கப்பட்டது. இதன்படி இந்த இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவேற்றம் செய்வோருக்கு மட்டுமே சம்பளம் சென்று சேரும்.
ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவிவரும் சூழலில் பஞ்சாப் மாநில அரசின் இந்த கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அண்டை மாநிலமான ஹரியாணாவில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின்னர் பொது இடங்களிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கலாசார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in