தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்... 6 மாத காலத்திற்குள் செலுத்த திட்டம்!

தெரு நாய்கள் மூலம் ஏற்படும் வெறி நோய் பரவலை தடுக்கும் நோக்கில், கோவை மாநகராட்சியின் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் முகாமை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1.11 லட்சம் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது வார்டு வாரியாக நடைபெறும். தினமும் குறைந்தது 200 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த பணியில் இரண்டு என்.ஜி.ஓ அணிகள் ஈடுபடுகின்றன.
இது தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் செலுத்தும் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமில்லாமல், ஊராட்சி பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் கடித்தால் பாதிப்பு இருக்காது. கோவை மாவட்டத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் நான்கு கருத் தடை மையங்களில் மாதம் 1,200 நாய்களுக்கு கருத் தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க, தடுப்பூசி மற்றும் கருத்தடை இரண்டும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கூறியதாவது: வரும் 27ம் தேதி கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிணத்துக்கடவில் தனியார் பள்ளி மாணவிக்கு நடந்த தேர்வுச் சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், அவர்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.