ஓடிடி தளம் போல் இல்லாமல், திரையரங்கில் பார்க்கும் ‘ரீகல் டாக்கீஸ்’ ..
![ஓடிடி தளம் போல் இல்லாமல், திரையரங்கில் பார்க்கும் ‘ரீகல் டாக்கீஸ்’ ..](https://newstm.in/static/c1e/client/106785/migrated/bba4e25dabcf8fc085f3ae19c697656c.webp?width=836&height=470&resizemode=4)
தமிழ்த் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதில் வெற்றி கண்டவர் சி.வி.குமார். அவருடைய திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட பல படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
இவருடைய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே, தொடர்ச்சியாக சிறுபடங்கள் தயாரிப்பு அதிகமானது என்று சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்களைப் பின்பற்றி இப்போது சி.வி.குமாரும் புதிய திட்டம் ஒன்றை உருவாகியுள்ளார்.
மாறிவரும் கால சூழலில், மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதை எப்படி விரும்புகிறார்களோ, அதே அளவிற்கு இருக்கும் இடத்தில் இருந்தபடியே மொபைல் ஃபோனில் தங்களுக்கு பிடித்தமான படங்களை வழங்கும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களையும் விரும்புகிறார்கள். அதனால் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை “ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் விரைவில் தொடங்க இருக்கிறார்.
இதன்மூலம் பயனாளர்கள் வீட்டிலிருந்தபடியே தாங்கள் நினைக்கும் படங்களை, நினைத்த நேரத்தில் பார்த்து ரசிக்கலாம். இதில் ஒரு படத்தை ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ’ ரீகல் டாக்கீஸ்’ செயலியை இம்மாதம் வெளியிட இருப்பதால், தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ரீகல் டாக்கீஸ் மற்ற ஓடிடி தளங்களைப் போன்று இருக்காது எனவும், திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் என்றும், சிறு பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in