1. Home
  2. தமிழ்நாடு

எனது தலைமையில் 1000 இளைஞர்கள் போரிட தயாராக உள்ளனர் - கே.டி. ராஜேந்திர பாலாஜி..!

Q

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

அவர் கூறியதாவது, "எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்". போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். எனது தலைமையில் 1000 இளைஞர்கள் போரிட தயாராக உள்ளனர் என்று கூறினார்.

மேலும், "பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும்" என்றார். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக, யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்றால், விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், நான்காவது ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றார். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள், ஆனால் ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவோம் என ஸ்டாலின் சொன்னார். கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கூறினார். ஆனால், மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அரிசி, பருப்பு, செங்கல் விலை என எல்லாமே உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அதிமுக ஆட்சியின் சிறப்பையும், ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எடப்பாடி பழனிச்சாமி சொல்வது பொய்யா அல்லது ஸ்டாலின் சொல்வது பொய்யா என்பது மக்களுக்குத் தெரியும். ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய் என்றார்.

"மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார், அது நடக்காது". திமுகவிற்கு அருமையான அடி கிடைக்கும். குரு பெயர்ச்சியில் திமுகவிற்கு இறங்கு முகம், அதிமுகவிற்கு ஏறுமுகம் என்றும் அவர் கூறினார்.

திமுகவின் ஆட்சியில் முதல்வரைத் தவிர அரசு ஊழியர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான தக்க பதிலடி 2026 தேர்தலில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like