காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு...
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/eb56af3851ee3a2afa779241deb6161c.webp?width=836&height=470&resizemode=4)
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் நேற்று முன்தினம் காரைக்கால் நகரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த முதுநிலைகாவல் கண்காணிப்பாளர் இரு காவலர்களையும் தனது அலுவலகத்துக்கு அழைத்து வரும்படி, அங்கிருந்த மற்ற காவலர்களிடம் கூறினார். இதையடுத்து, 2 காவலர்களும் எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று, அவரை சந்தித்தனர்.
“ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியது ஏன்?” என்று கேட்டு, அவர்களைக் கண்டித்த காவல் கண்காணிப்பாளர், இருவரும் காரைக்காலில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத் தில் செல்பவர்களுக்கு ரோஜா பூ வழங்க வேண்டும் என்று நூதன தண்டனையை வழங்கினார்.
இதையடுத்து, இரு காவலர் களும் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் புதிய பேருந்து நிலைய சிக்னலில் நின்று, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு ரோஜா பூ வழங்கினர்.
மேலும், சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.