தலைவர் விஜயை வரவேற்க தயாராகும் த.வெ.க.வினர் ...!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அக்கட்சி தயாராகி வரும் நிலையில், மண்டலம் வாரியாக பூத் ஏஜெண்டுகள் மாநாடு நடத்த தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளதாகவும், கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து, கோவையில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் கோவை எஸ்.என்.எஸ்.பொறியியல் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடுகளை அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டார். விஜயின் பாதுகாப்புக்காக அவருடைய பவுன்சர்கள் நிகழ்ச்சி மைதானத்தில் இப்போதே பணிகளை ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதால், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா ஆகிய இடங்களில் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை, துவா வழிபாடு செய்யப்பட்டு உள்ளது.
கருத்தரங்கில் பங்கேற்க, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பூத் கழக நிர்வாகிகளுக்கான நுழைவு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை கோவை விமான நிலையம் வரும் விஜய்க்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் கோவை மாநகரில் விஜய் வரக்கூடிய வழித்தடத்தில் போஸ்டர்கள், கொடிகள் அமைத்துள்ளனர் அக்கட்சியினர்.