டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை திடீர் சந்திப்பு..!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி அமைந்துள்ளது.
அதேவேளை, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லத்திற்கு அண்ணாமலை சென்றார். அங்கு டி.டி.வி. தினகரனும், அண்ணாமலையும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டி.டி.வி. தினகரனிடம், அண்ணாமலை வலியுறுத்தியதாக தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த சில நாட்களுக்குமுன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். தற்போது டி.டி.வி. தினகரனை அண்ணாமலை சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.png)