உதவிக்கு இருந்தவர் செய்த உபத்திரம்.. பப்ஜி விளையாட முதியவரிடம் ரூ. 6.5 லட்சம் திருட்டு !
சென்னை அண்ணாநகரில் மருத்துவர் முருகேசன்(75) என்பவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். இவரது பிள்ளைகள் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இதனால் வீட்டில் வேலை செய்வதற்கும், தன்னை பராமரிக்கவும் ஒரு பெண்ணை பணி அமர்த்திய முருகேசன், அப்பெண்ணை வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கவைத்துள்ளார். அப்பெண்ணின் 16 வயதுடைய மகனும் தங்கியுள்ளார்.
இந்நிலையில், முருகேசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வங்கி கணக்கில் இருந்து திடீர் திடீரென பணம் மாயமானதாக தெரிவித்தார். எனவே அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தை மீட்டு தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையின் ஒருபகுதியாக வீட்டில் பணிபுரியும் பெண் மற்றும் அவரது மகனிடன் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் முருகேசனின் உறவினர்கள் அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டாம் என்று கூறினர்.
இதனால் போலீசாருக்கு இருந்த சந்தேகம் மேலும் வலுபெற்றது. எனினும் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முருகேசன் தனக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைனில் வாங்கி வருவதற்காக வீட்டில் தங்கி பணிபுரியும் பெண்ணின் மகனின் செல்போனில் தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.
இதை எப்படியே கண்காணித்து ரகசிய எண்ணை அறிந்துக்கொண்ட 16 வயது சிறுவன் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். தான் செல்போனில் பப்ஜி கேம் விளையாட ரூ.6.5 லட்சம் வரை செலவு செய்திருப்பது தெரியவந்தது.
முதியவரின் வங்கி கணக்கை தவறாக பயண்படுத்தி பப்ஜி விளையாட்டிற்காக ரூ.6.5 லட்சம் வரை எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in