1. Home
  2. தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை காரமடைக்கு இடமாற்றம் ?

1

காந்திபுரம் நஞ்சப்பாசாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித்தனியே அமைந்துள்ளது. ஆண்கள் சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி மேற்பார்வையில், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் இங்கு வேலை செய்து வருகின்றனர்.

சிறைவளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. கோவை மத்திய சிறையை இடம் மாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய சிறைக்கு ஏற்ற 120 ஏக்கர் இடம் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய்த்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. காரமடையில் இடம் உள்ளது குறித்து வருவாய்த்துறையினரால், சிறைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

 காரமடை அருகே பிளிச்சியில் சுமார் 100 ஏக்கர் இடம் உள்ளதும், அங்கு சிறைச்சாலை அமைக்க முடியும் என்றும் வருவாய்த்துறையினரால், சிறைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளும் பிளிச்சி பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர். 

இதுதொடர்பாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளதால், சிறை வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான பரிந்துரையை அனுப்பி இருந்தோம். சிறைச்சாலை அமைக்கப்பட உள்ள பிளிச்சி பகுதியிலும், மத்திய சிறையிலும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். சிறைச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது இறுதியான பின்னரே, எவ்வளவு ஏக்கரில் இடம் தேவை எனத் தெரியவரும். அரசு நிலமும் உள்ளது. தேவைப்பட்டால் தனியார் நிலமும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

Trending News

Latest News

You May Like