நாகர்கோவில்- மும்பை இடையே இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து..!
16340 நாகர்கோவில் – மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ், 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை 06.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது. ஆனால் மும்பை நோக்கி செல்லும் வழியில் கனமழையால் பாதை சேதம் மற்றும் நீர்மட்டம் அதிகரித்த காரணத்தால், இந்த ரயில் பூனேவில் நிறுத்தப்பட்டு, அங்குதான் நிறைவடைந்தது. அதாவது, பூனே முதல் மும்பை வரை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், 16339 மும்பை சிஎஸ்டி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், 2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி இரவு 20.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட வேண்டியது. ஆனால், மும்பை – பூனே இடையே ரயில் இயக்கம் சீராக முடியாததால், இந்த ரயில் பூனேவில் இருந்து மட்டுமே புறப்படும். அதுவும் தனது வழக்கமான நேரப்படி, அதாவது ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை 00.20 மணிக்கு பூனேவில் இருந்து புறப்படவுள்ளது. இதனால், மும்பை சிஎஸ்டி முதல் பூனே வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை, தானே, குர்லா உள்ளிட்ட நிலையங்களில் பாதைகள் நீரால் மூழ்கியதால், அங்கு செல்லும் பல உள்ளூர் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சில நீண்ட தூர ரயில்களும் மாற்றுப்பாதைகள் மூலம் இயக்கப்படுகின்றன.
மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மும்பை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சாதாரணத்தை விட இருமடங்கு மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதை சேதமடைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. நிலைமை சீராகும் வரை பயணிகள் மாற்று திட்டங்களை மேற்கொள்ள வேண்டுகிறோம்” என்று தெரிவித்தனர்.