இன்று தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து..!
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தினமும் ஏராளமானோர் வியாபாரிகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு நாள் இந்த ரயில் சேவையில் பீக் நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மின்சார ரயில் சேவையை இன்றியமையாததாக உள்ளது. கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில் சேவையை தான் நம்பியுள்ளனர். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும். மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.
பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யபட்டுள்ளது.
தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நேரத்தில் பல்லாவரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும்.பின்னர், மாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். எனவே, புதுப்பிக்கப்பட்ட நேரத்தின்படி பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.