பிறந்த நாளில் சோகம்.. கணவர், சகோதரியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன் பாளையத்தை சேர்ந்தவர் அன்னபூரணி(வயது42). இவருக்கு தேவி(19), சரண்யா(12) என்ற மகள்கள் உள்ளனர். சரண்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தேவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னூர் அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்த சேதுபதி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு சேதுபதி தனது மனைவியுடன், மாமியார் வீட்டிலேயே தங்கி அங்குள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் தேவிக்கு பிறந்த நாள் என்பதால் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் அன்னபூரணி தனது மகள்கள் தேவி, சரண்யா, மருமகன் சேதுபதி ஆகியோருடன் பொங்கலூர் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு 4 பேரும் அங்குள்ள கிளை வாய்க்காலில் குளித்தனர். வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சேதுபதி தனது மனைவி தேவியையும், அவரது தங்கை சரண்யாவையும் அழைத்து கொண்டு கால்வாய்க்கு சென்றார்.
முதலில் சேதுபதி கால்வாயில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். தேவியும், சரண்யாவும் படித்துறையில் நின்று தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென குளித்து கொண்டிருந்த சேதுபதி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதனை கண்ட மனைவி தேவியும், சரண்யாவும் மீட்க முயற்சித்தனர். ஆனால் எதிர்பாரத விதமாக அவர்களும் கால்வாயில் தவறிவிழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனை கரையில் நின்று பார்த்த அன்னபூரணி மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் பார்த்து சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் பல்லடம் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கால்வாயில் இறங்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடினர்.
இந்நிலையில் அடித்துச்செல்லப்பட்ட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன. தேவி என்பவரின் உடல் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மேலும் சேதுபதி, சரண்யா ஆகியோரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டனர்.
newstm.in