கடலூர் அருகே சோகம்.. மரத்தின் மீது கார் மோதல்.. முதிய தம்பதி உட்பட மூவர் பலி..!
![கடலூர் அருகே சோகம்.. மரத்தின் மீது கார் மோதல்.. முதிய தம்பதி உட்பட மூவர் பலி..!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/6292826513b3457c67eca165130c2883.jpg?width=836&height=470&resizemode=4)
கடலூர் சிப்காட் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (67). இவரது மனைவி லலிதா (61). இவர்கள் இருவரும் நேற்றிரவு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கோதண்டம் என்பவர் காரை ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கடலூர் சிப்காட் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த லலிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ராமு மற்றும் ஓட்டுநர் கோதண்டத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராமுவும், கோதண்டமும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.