நெல்லையில் சோகம்..! இறந்த தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி 12-ம் வகுப்பு தேர்வெழுதிய பள்ளி மாணவன்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - சுபலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சுனில்குமார் என்ற மகனும் யுவாசினி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் சுபலட்சுமி இதய நோயால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும், தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 03) அதிகாலையில் சுபலட்சுமி உடல்நிலை குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். சுபலட்சுமி மகன் சுனில் குமார் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், தாயின் இறப்பு செய்தி கேட்டு சுனில்குமார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, தாய் இறந்த சோகத்தை தாங்கி கொண்டு, தமிழ் தேர்வை மாணவர் எழுதியுள்ளார். தொடர்ந்து, தேர்வினை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக தேர்வுக்கு சென்றபோது சுனில்குமார் தனது தாயின் சடலத்தை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்று கண்ணீரோடு தேர்வு எழுத சென்றுள்ளார்.