கனமழையில் நேர்ந்த சோகம்..! மின்னல் தாக்கி சிறுவன் பலி..!
தென்காசியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சிவசக்தி (14). இந்த நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.