தர்மபுரியில் சோகம்..! மனைவி மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b120ae07310fe658b29510dca92da660.jpeg?width=836&height=470&resizemode=4)
தருமபுரி சேர்ந்தவர் சின்னப் பையன் மகன் சிவன் (வயது 35). இவர் ஆட்டோ டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி நந்தினி வயது 28. இந்த தம்பதியினருக்கு அபி வயது 6, தட்சன் வயது 4 ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அடுத்து சந்தேகத்தில் ஜன்னல் வழியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டினுள் பார்த்துள்ளனர்.
அப்போது சிவனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் காவல் துறையினர் தடய அறிவியல் துறையினருக்கு தகவல் அளித்து விரைந்து வந்தனர்.
காவல் துறையினர் பூட்டிய வீட்டை உடைத்து பார்த்த போது சிவன் உயிருடன் இருந்ததால், அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 28-ம் தேதி வெளியில் வந்ததை பார்த்துள்ளனர். அதன் பிறகு சிவன் மற்றும் அவரது மனைவி நந்தினி இரண்டு குழந்தைகள் யாரையும் வெளியில் பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
காவல் துறையினர் வீட்டை சோதனை செய்து பார்த்ததில் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் அருகில் இருந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் சிவன், மனைவி மற்றும் குழந்தைகளை மருந்து கொடுத்துக் கொன்றுவிட்டு தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று கணவனும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.