கோவையில் சோகம்..! வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த 10 கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்றிருக்கின்றனர். இதில் சில மாணவர்கள் ஆற்றில் ஆழம் அதிகமுள்ள பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதைக் கண்ட சக மாணவர்கள் பதறியடித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் 5 மாணவர்களும் உயிருடன் மீட்கப்படவில்லை. அவர்களது உடலை மீட்ட காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் என்பது தெரியவந்துள்ளது. மகிழ்ச்சியாக இருப்பதற்காகச் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் உயிரிழந்திருப்பது வால்பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.