சென்னையில் அரங்கேறிய சோகம்..! மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு..!
சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* பாரிஸ்- 168.9
* மடிப்பாக்கம்- 148.2
* கொரட்டூர்-142.8
* நெற்குன்றம்- 138.6
* நாராயணபுரம் ஏரி- 124.8
* அம்பத்தூர்- 112.5
* வளசரவாக்கம்- 111.6
* மேடவாக்கம்- 105.3
* பள்ளிக்கரணை- 104.1
* அய்யம்பாக்கம்-96.9
கனமழை எச்சரிக்கை
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடமேற்கு வங்கக் கடலில், ஒடிஷா - மேற்கு வங்க கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் உருவாகக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் லேசான மழை உருவாக வாய்ப்புள்ளது; வரும், 28 வரை மழை தொடர வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
.png)