சென்னையில் சோகம்..! டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
இந்நிலையில்,பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜ்பாலாஜி (13). இவர் பூந்தமல்லியை அடுத்த குமணஞ்சாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்பாலாஜி கடந்த சில தினங்களாக பூந்தமல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிறுவனின் உடலில் உப்பு அதிகரித்து சிறுநீரகம் செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜ்பாலாஜி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 10 ஆம் வகுப்பு மாணவனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கியிருப்பதும் முறையான சுகாதார பணிகள் மேற்கொள்ளாததும் தான் சிறுவனின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.