சேலத்தில் தொடரும் சோகம்..!! சிலிண்டர் வெடிப்பு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு..!

சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன். இவர், கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.கடந்த 23 ஆம் தேதி, காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் வரிசையாக மற்ற வீடுகளில் தூண்கள், சுவர்கள் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில், 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி என்பவர் இன்று உயிரிழந்தார்.
இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.