நூல் அறுந்த பட்டம் மின் கம்பியில் சிக்கியது.. எடுக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சகுபர் அலி. இவருடைய மகன் அப்துல் வாசிம் (14). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவர் அப்துல் வாசிம் தனது வீட்டின் மாடியில் இருந்து பட்டம் பறக்க விட்டார். திடீரென நூல் அறுந்ததால், பறந்துகொண்டிருந்த பட்டம் வீட்டின் பின்புறம் உள்ள ரயில்வே யார்டில் மின்சார ரயில்கள் செல்லும் உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கியது.
இதனால் அப்துல் வாசிம், அங்கு நிறுத்தி இருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கி இருந்த பட்டத்தை எடுக்க முயன்றார். அப்போது, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய அப்துல் வாசிம் தூக்கி வீசப்பட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன் அப்துல் வாசிம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.