1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

1

தெனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் வரும் ஏப்ரல் 20 முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தெனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் – செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பி, சேமியர்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி, நந்தனம் சந்திப்பின் வழியாக அண்ணாசாலை நோக்கிச் சென்று இலக்கை அடைய வேண்டும்.

சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் – நேரடியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை வழியாக செல்லலாம்.
.
ஜி.கே.எம் பாலம் வழியாக செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் – ஒருவழி பாதையாக மாற்றப்படும். காந்தி மண்டபம் சாலையில் இருந்து இங்கு நுழைய அனுமதி இல்லை. அதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையில் இருந்து ஒருவழியாக செயல்படும். ஆனால் அண்ணாசாலையிலிருந்து இச்சாலையில் நுழைய அனுமதி இல்லை.

அண்ணாசாலை வழியாக செனடாப் 1வது தெரு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், செனடாப் 1வது பிரதான சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.

கோட்டூர்புரத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கிச் செனடாப் சாலை வழியாக வரும் வாகனங்கள் – தடை செய்யப்படும். இவ்வாகனங்கள் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு மற்றும் அண்ணாசாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்துக்கு தடை
போக்குவரத்தினை சீராக கட்டுப்படுத்தும் நோக்கில், அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒருவழி சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like