உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் !ஏரிக்குள் பாய்ந்த கார்..!
கொடைக்கானல் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை காலம் முடிந்துள்ளபோதும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் பழம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தனது இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார்.
அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்த நிலையில் நட்சத்திர ஏரியின் கிரீன் ஏக்கர் என்ற விடுதியில் அருகே ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஏரிக்குள் பாய்ந்து விபத்திற்கு உள்ளானது. காரில் இருந்த இருவருக்கும் நீச்சல் தெரிந்திருந்ததால் அவர்கள் உடனடியாக காரில் இருந்து வெளியேறினர். ஆனால் ஜெயபிரகாஷுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் காருக்குள் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிறுகள் மூலம் ஜெயப்பிரகாஷை மீட்டனர். பின்னர் ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு ஜீப் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.