சுற்றுலா பயணிகள் ஷாக்..! பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இதில் பழைய குற்றாலம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிப்பதால் அந்த அருவி வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பழைய குற்றாலம் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியார் விடுதிகள் அருகே சாலையில் எவ்வித பயமும் இன்றி கரடி உலாவிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. எனவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி வனக்கோட்டம் குற்றாலம் காப்புக்காட்டில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவி பகுதியில் இரவு நேரங்களில் யானைகள், கரடிகள், மிளா உள்பட பல அரிய வகை விலங்குகள் குடிநீர் தேவைக்காக உலா வருகின்றன. பழைய குற்றாலம் செல்லும் சாலை வழியாக மாலை நேரங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இனிமேல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும். பழைய குற்றாலம் சாலையில் சுற்றுலா பயணிகள் முடிந்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.png)