நாளை மஹா சிவராத்திரி : எப்படி விரதம் இருந்தால், என்ன பலன் கிடைக்கும் ?

மகா சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதைகள் பல உள்ளன. அதில் முக்கியமாகக் கூறப்படும் கதை ஒன்று உள்ளது. அதாவது பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எல்லையில்லா கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடை விடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்து அருளினார்.
அப்பொழுது பார்வதி தேவி ஈசனிடம், சுவாமி...நான் தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “மகாசிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவ சந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி விரத முறை :
நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் தொடங்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவை கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறு நாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
மகாசிவராத்திரி விரத பலன்கள் :
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கி விடும். இவர் தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். பூமி தானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்தானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற்கு ஈடாகாது.