1. Home
  2. தமிழ்நாடு

இன்று 44 இடங்களில் குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது..!

1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் உள்ளன.

காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு இன்று நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 170 மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது.

இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு காரணமாக இன்று (ஜூன் 15ம் தேதி) நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று அறிக்கையின் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like