இன்றே கடைசி நாள்..! பெண்கள் மட்டும் அப்ளை பண்ணுங்க.. அங்கன்வாடி மையங்களில் 7783 பணியிடங்கள்!

நேரடி நியமன முறையில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 7,783 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2025 ஏப்ரல் 1-ஆம் தேதியின்படி 25 வயது நிறைவடைந்தும் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 25 முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு 2025 ஏப்ரல் 1-ஆம் தேதியின்படி 25 வயது நிறைவடைந்தும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 20 முதல் 45 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியமாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ. 7,700 முதல் 24,200 வரையிலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 4,100 முதல் 12,500 வரையிலும் ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்து 12 மாதங்கள் நிறைவு செய்த பிறகு, அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
பெறப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவை அடங்கிய அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரால் அனுப்பப்படும். நேர்காணலின்போது விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திட்ட அலுவலகங்களிலும், வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீடு விவரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.icds.tn.gov.in அல்லது https://icds.tn.gov.in/icdstn என்ற இணையதள முகவரிகள் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.