இன்று சுக்கிரவார பிரதோஷம் : செல்வம் பெருக இந்த மந்திரத்தை சொல்லுங்க..!

மாதந்தோறும் திரியோதசி திதி வரும் நாளின் மாலை 4 முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தேவர்களை காப்பதற்காக சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டதற்கு நன்றி கடனாக தேவர்கள் செய்த பூஜைகளை ஏற்று, அவர்களுக்கு, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் திருக்காட்சி கொடுத்து, அருளிய காலமே பிரதோஷ காலமாகும். தினமும் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தை நித்திய பிரதோஷ காலம் என்கிறோம். திங்கட்கிழமையில் வரும் பிரதோஷத்தை சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகாபிரதோஷம் என்றும் சொல்கிறோம். அதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சுக்கிரவார பிரதோஷம் என்கிறோம்.
செல்வங்களை, சுக போகங்களை வழங்கும் சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கை சுபிட்சமாகும். பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கும், அம்மனுக்கும், வெள்ளியான சுக்கிர கிரகத்திற்கு உரிய நாளாகும். இந்த நாளில் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும். செல்வ வளம் பெரும். இந்த நாளில் சிவனுக்கு பால் சாதம், தயிர் சாதம் நைவேத்தியமாக படைப்பதும், அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பதாலும் சகல விதமான பாவங்களும் நீங்கும்.
பிரதோஷங்களில் பணக் கஷ்டங்களை தீர்க்கக் கூடிய ஆற்றல் மிகுந்த பிரதோஷம் சுக்கிர வார பிரதோஷமாகும். ஏப்ரல் 25ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பிரதோஷ நாளில், சிவலிங்கத்தை வழிபாடு செய்தால், இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பணத்திற்கு பஞ்சமே வராது. சித்திரை மாதத்தில் வரும் முதல் பிரதோஷமானது, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் இந்த பிரதோஷ நாளில், ஈசனை வழிபாடு செய்ய நம்முடைய கடன் சுமை குறையும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் சிவலிங்கம் பிடித்து வைக்க வேண்டும். பிள்ளையார் பிடிப்பது போலவே ஒரு லிங்கத்தை வில்வ இலையின் மேல் பிடித்து வைத்து, அதன் மேல் ஒரு குங்கும பொட்டு வைத்து, வில்வ இலைகளால் இந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். "ஓம் நமசிவாய" மந்திரத்தை சொல்லி 11 முறை வில்வ இலைகளை அந்த மஞ்சள் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, 4 மஞ்சள் நிற வாழைப்பழம் நெய்வேத்தியம் வைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு இவ்வளவுதான். மஞ்சளால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, அர்ச்சனை செய்த அந்த வில்வ இலைகளை பணப்பெட்டியில் வைக்க பண வரவு அதிகரிக்கும்.
இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, அந்த மஞ்சள் நிற வாழைப்பழத்தை பிரதோஷ நேரத்தில் கொண்டு போய் பசு மாட்டிற்கு உங்கள் கையால் சாப்பிடுவதற்கு கொடுத்து விடுங்கள். இந்த வழிபாட்டை நாளைய தினம் எவரொருவர் வீட்டில் இருந்த படி செய்கிறீர்களோ, அவருக்கு நிச்சயமாக வீட்டில் இருக்கும் பணக் கஷ்டமானது தீரும். மூன்று நாள் கழித்து அந்த மஞ்சளில் செய்து வைத்திருக்கும் சிவலிங்கத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து மண்பாங்கான இடத்தில் ஊற்றி விடலாம்.
ஒருவேளை நீங்கள் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு செல்கிறீர்கள், கோவிலில் இருப்பீர்கள் என்றால், இரண்டு விரலி மஞ்சள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, "ஓம் நமசிவாய" மந்திரத்தை கோவிலில் அமர்ந்தபடியே சொல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் போதே அங்கு விற்கும் வாழைப்பழங்களை வாங்கி ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இல்லையென்றால் சில கோவில்களில் பசு இருக்கும். கோவிலில் இருக்கும் அந்த பசுவிற்கும் இந்த வாழைப்பழத்தை நீங்கள் உங்கள் கையால் கொடுத்து விடலாம். வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் விரலி மஞ்சள் கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும், வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதால், பணக்கஷ்டம் இருக்கும். நல்ல தொழில் அமையாத காரணத்தால் பணக்கஷ்டம் இருக்கும். உங்களுக்கு அதுபோல பிரச்சனை இருந்தால் கூடவே நல்ல சந்தனத்தை வாங்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய தானமாக கொடுங்கள். இந்த சந்தன அபிஷேகத்தில் சிவபெருமான் மனம் குளிர்ந்து, நீங்கள் வேண்டிய வரத்தை கொடுத்து விடுவார். வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் வேலையில் இருக்கும் பிரச்சனை நீங்கும். சம்பளம் உயரும். வியாபாரத்தில் இருக்கும் தடைகள் விலகும். லாபம் உயரும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் சிவ வழிபாடு செய்யும் போது பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையான, திருஞானசம்பந்தரால் அருளப்பெற்ற தேவார திருப்பதிகத்தில் உள்ள முக்கியமான பதிகத்தை பாடி சிவனை வணங்குவது சிறப்பானது. இந்த பதிகம், திருநின்றியூர் தலத்தில் பாடப்பட்டதாகும். மகாலட்சுமி, சிவனை வழிபட்ட தலம் என்பதால் இதற்கு திருநின்றியூர் என்று பெயர். இந்த பதிகத்தை படித்தாலும், இந்த தலத்திற்கு சென்று வழிபட்டாலும் மகாலட்சுமியின் அருளும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும். இந்த பாடலை எவர் ஒருவர் பாடினாலும், கேட்டாலும் அவர்களின் பாவங்கள், பயங்கள், தீய வினைகள், நோய்கள் ஆகியவை அகலும் என திருஞானசம்பந்தரே கூறி உள்ளார்.
செல்வ தரும் தேவார திருப்பதிகம் :
சூலம்படை சுண்ணப்பொடி
சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்நிலை யோர்க்கே
அச்சம்மிலர் பாவம்மிலர்
கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர்
தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங்
கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப்
பாதம்பணி வாரே.
பறையின்னொலி சங்கின்னொலி
பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை
யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை
யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லாதென
துள்ளம்முண ராதே.
பூண்டவ்வரை மார்பிற்புரி
நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு
பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு
நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது
அறியாரவ ரறிவே.
குழலின்னிசை வண்டின்னிசை
கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்
சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது
ஏந்தியன லாடுங்
கழலின்னோலி யாடும்புரி
கடவுள்களை கண்ணே.
சிவனின் அருளை தரும் மந்திரம் :
மூரன்முறு வல்வெண்ணகை
யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடும்
சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில்
மிடையுந்திரு நின்றி
ஊரன்கழ லல்லாதென
துள்ளம் முணராதே.
பற்றியொரு தலைகையினில்
ஏந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி
தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத
ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி
யூரின்நிலை யாரே.
நல்லம்மலர் மேலானொடு
ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென
நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி
யூரில்நிலை யாரெம்
செல்வரடி யல்லாதென
சிந்தையுண ராதே
நெறியில்வரு பேராவகை
நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை
கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை
யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி
வாழ்த்தும்மது வாழ்த்தே.
குன்றம்மது எடுத்தானுடல்
தோளும்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற
வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ்
ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக்குறை
வின்றிநிறை புகழே.