1. Home
  2. தமிழ்நாடு

இன்று குடியரசு தினம் : நம் பாரத நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி சிந்திக்க வேண்டும்..!

1

நமது நாடு பழமையான ஒரு நாடு. தற்போது உள்ளது போல பாரதம் அந்தக் காலத்தில் தனித் தனி மாநிலங்கள் இருக்காது. சிற்றரசு, பேரரசு என சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து அவரவர் எல்லையைப் பொறுத்து குறுநில மன்னர்கள்,  ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் பரங்கியர் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பிரிவினையை தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மன்னர்களிடம் நைச்சியமாகப் பேசி சூழலைப் பயன்படுத்தி நமது நாட்டுக்குள் வஞ்சகமாக நுழைந்து, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

மன்னர் கால ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாக தனித்து செயல்பட முடியாது. கருத்துக்களை கூற முடியாது. ஏன் தாமாக சிந்திக்கவும் கூட முடியாது. சுதந்திரம் பற்றி கனவு காண முடியாது. மன்னர் இறந்தால், அவருடைய நேரடி வாரிசு அடுத்த மன்னராகிவிடுவார். அதன் பின் வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அளவில்லாமல் போனது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்று முடிவு செய்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களையும், நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் நினைவு கூறும் வகையில், ஜனவரி 26-ம் தேதியன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாளாகும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் எனில், அதன் பின்னணியில் லட்சக்கணக்கான தியாகிகளின் தன்னலமற்ற சேவை இருக்கிறது. அவர்களின் ஆன்ம பலம் இணைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சுமார் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம். தலைமுறை தலைமுறையாக இந்த ஒற்றுமைக்காக தன்னலமின்றி பாடுபட்டு தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். 

நம்முடைய நாட்டை நோக்கி காலந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வருகை புரியக் காரணம் அவர்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வேர் நமது புண்ணிய பூமியில்தான் உள்ளது. இதை அவர்கள் ஆய்வுகள் மூலமாகவும் நேரடி அனுபவம் மூலமாகவும் உணர்ந்துள்ளார்கள்.இந்தியா ஆன்மிகத்தை ஆதாரமாக வாழ்வியலைக் கொண்டுள்ள நாடு. நம்முடைய எளிய வாழ்க்கையின் அடிப்படை பண்பை விட்டுக்கொடுக்காமல் நாம் எப்போதும் பராமரித்து வருவதால் நம்முடைய கலாச்சாரம் உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம். 

இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளின் கனவு எனலாம். ஆனால் அது நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாகும். நல்லரசாக மட்டுமல்லாமல் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் விதமாக, சமூக வேறுபாடுகள் அற்ற மக்களாட்சி உண்மையிலேயே ஏற்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மக்களின் வறுமையைப் போக்குவதில் நம் தேசம் பாடுபட வேண்டும் மிகப் பெரும் மக்கள் திறனைக் கொண்டு, வாழ்க்கையை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது நம் கண் முன்னேதான் உள்ளது. நிச்சயம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் நம்மால் நல்ல மாற்றங்களை நிகிழ்த்த முடியும். ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இக்கனவு ஈடேறும். நல்லதே நினைத்து நல்லதே செயல்படுத்தினால், வானம் கூட வசப்படும்

Trending News

Latest News

You May Like