1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆடி வெள்ளி... ஆடி மாதம் 3-வது மிகவும் விஷேசம்.. ஏன் தெரியுமா?

1

வெள்ளிக்கிழமைக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அதிலும் 3வது வெள்ளி மிக மிக விஷேசம் ஆகும்.. ஏன் தெரியுமா? நவகிரஹங்களில் களத்திரகாரகன், பணம், செல்வாக்கு ஆகியவற்றை தரக்கூடியவன் சுக்கிரன்.. வெள்ளிக்கிழமை அந்த சுக்கிரனுக்குரியது.. அம்பிகையை ஆராதிக்கக் கூடிய தினம் வெள்ளிக்கிழமை. எல்லா மாதமுமே வெள்ளிக்கிழமைகள் சுக்ரவாரம் என்று போற்றப்படுவதும் அன்று அம்மனை ஆராதிப்பதும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆடிமாதத்தில் அது நூறு மடங்கு அதிக பலனைத் தரும் என்கிறது புராணம்.

புராணக்கதைகள்

சுக்ரனாகிய வெள்ளி, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த சமயத்தில் அவருக்கு மகாபலி தானம் தருவதைத் தடுத்தார். அதனால் ஒரு கண் பார்வையை இழந்தார் என்பதெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி இழந்த பார்வையை மீண்டும் பெறவும், தானம் தருவதைத் தடுத்ததால் வந்த பாவம் போகவும் அவர் சிவபெருமானை வணங்கினார். அந்த சமயத்தில் பார்வதியும் சிவனை நினைத்து தவம் செய்துகொண்டிருந்தாள் ஈஸ்வரன் முதலில் சுக்ரனுக்கு அருள்வதா, அல்லது பார்வதிக்கு காட்சி தருவதா? என்று யோசித்தார். அப்போது அம்பிகை முதலில் சுக்ரனுக்குக் காட்சி கொடுங்கள். பிறகு எனக்கு அருளுங்கள்.. என்று விட்டுக்கொடுத்தாளாம். இதனால் சந்தோஷப்பட்ட சுக்ரன், தனக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமையில் அம்மனை ஆராதிப்பவர்களுக்கு எல்லாவிதமான நற்பலன்களும் கிடைக்கும் என்று கூறினாராம்..

வெள்ளி கிழமையில் மகாலக்ஷ்மியை வணங்குவது விசேஷம்

சுக்ரனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது, ஆடி மாதத்தில் நிகழ்ந்ததாகவும் அதனாலேயே ஆடிவெள்ளிக்கு விசேஷம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல , பகவான் விஷ்ணுவுக்கு அபசாரம் செய்த பாவம் தீர சுக்ரபகவான் மகாலக்ஷ்மியை வேண்டினார். திருமகள் அவருக்கு காட்சி தந்து அவரது தோஷம் தீர அருள்பாலித்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான். இதனால் வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவது போலவே மகாலக்ஷ்மியை வணங்குவது விசேஷம்.

மஞ்சள் பூசிக் குளித்தல் மாங்கல்யம் நீடிக்கும்

ஆடி வெள்ளி தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக்குளி! என்றொரு பழமொழி உண்டு. இதை ஆடிச் செவ்வாய் என்று சிலர் சொல்வதும் உண்டு. மஞ்சள் மகாலக்ஷ்மிக்கு உரியது. ஆடி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் விடியற்காலையில் எழுந்து நீராடும்போது சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், சௌமாங்கல்யம் நீடிக்கும் என்பது ஐதிகம்.

ஆடி 3வது வெள்ளி ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளுமே விசேஷம் தான் என்றாலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டு, ஆடி மாதத்தை தேவர்களின் பிரதோஷ காலம் என்கிறது சாஸ்திரம். அதாவது நம்முடைய ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் ஆடிமாதம்தான் தேவர்களின் மாலை நேரத்தின் தொடக்கம். அதாவது தினப் பிரதோஷ நேரமான மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். பிரதோஷ நேரத்தில் தினமுமே விளக்கேற்றி வைத்துக் கும்பிடச் சொல்வார்கள். இதில் உச்சி காலமாகக் கருதப்படும் நேரம்தான் ஆடி மாத மூன்றாவது வெள்ளி. ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் என்பதால் பெரும்பாலும் ஆடி மாதத்தில் 5 வெள்ளிக் கிழமைகள் வரும். 5 வெள்ளிகளில் நடுவே அதாவது உச்சமாக இருப்பது 3 வது வெள்ளி. கடைசி வார வெள்ளிக்கிழமையில் பல சமயம் வரலக்ஷ்மி விரதம் அமையும், இதுவும் விசேஷம்தான்.

ஆடி மாதத்தில் எல்லா நாட்களுமே சிறப்பானவைதான். இதில் வெள்ளிக்கிழமை விசேஷம், அதிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகூடுதல் விசேஷம். இதைப் புரிந்துகொண்டு, அன்றைய தினம் அவரவர் வீட்டிலாவது ஒரு விளக்கை ஏற்றிவைத்து அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்

பலன்கள்

வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அம்பாளை வணங்கி வந்தால் உங்கள் வீடுகளில் வருடம் முழுக்க மகிழ்ச்சியும் சகல செளபாக்கியமும் நிலைத்து இருக்கும் என்று ஜோதிடர் ஷெல்வி கூறுகிறார்..அதுமட்டுமல்லாம, வீட்டில் தெய்வ கடாட்சம் நிறையும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பெண்களுக்கு சுமங்கலி பாக்யம் நிலைக்கும். வம்சம் தழைக்க வாரிசு பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அதனால் ஆடி மாதம் அம்பிகையை மறக்காமல் வழிபடுவது எல்லாவிதமான நன்மைகளும் உங்களை வந்து சேரும்

Trending News

Latest News

You May Like