இன்று ஆடி வெள்ளிக்கிழமை : இன்று படிக்க வேண்டிய மந்திரங்கள்..!
சூரிய பகவான், கடக மாதத்தில் பயணிக்கும் மாதமே ஆடி மாதமாகும். வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். அதுவே ஆடி மாதத்தில் வரும் போது சுக்கிரனும், சந்திரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை அமையும். இப்படி சுக்கிர, சந்திர சேர்க்கை ஏற்படும் போதும் பெண் தெய்வத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். அதனால் தான் ஆடி வெள்ளி அம்பிகைக்கு மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.
திருமண தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருக்கலாம். அதே போல், வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது, நிம்மதியே இல்லை, செல்வம் தங்கவே மாட்டேன் என்கிறது, தீராத கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறோம், கையில் பணமே தங்க மாட்டேன் என்கிறது, நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுகிறோம் என்கிறவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபடலாம். கேட்ட வரங்களை தரக் கூடிய மகிமை மிக்கது ஆடி வெள்ளி விரதமாகும்.
ஆடி வெள்ளி விரத முறைகள் :
ஆடி வெள்ளி விரதம் இருப்பது மிகவும் சுலபமானதாகும். அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன் அல்லது அம்பிகையின் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம். அம்பாள் படம் எதுவும் இல்லை என்றால் திருவிளக்கையே அம்பிகையாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் காலை, மதியம் இரு வேளையும் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருந்து, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்ளலாம்.
அன்றைய தினம் அம்பிகைக்கு உரிய லலிதா சகஸ்ரநாமம், காமாட்சி அஷ்டகம், செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற அம்பாளுக்கு உரிய பாடல்களில் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதை விட ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.