இன்று அமைச்சர் உதயநிதிக்கு முக்கியமான நாள்..! ஏன் தெரியுமா ?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c1550ca20fd7b4fe8a5bd3e1e8d66d7f.jpg?width=836&height=470&resizemode=4)
சென்னையில் கடந்த ஆண்டு 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக் கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒழிக்கவே முயற்சிப்போம். அதேபோல சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது" என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு, தமிழகத்தில் சாதாரணமாக கடந்து போனாலும், வட மாநிலங்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. சனாதன தர்மம் என்றால் வட மாநிலங்களில் இந்து மதம் என்ற பொருளும் உண்டு. எனவே, உதயநிதி இந்து மதத்தை தான் ஒழிக்க சொல்கிறார் என பாஜகவும் பிரச்சாரம் மேற்கொள்ள, மிகப்பெரிய பூதாகரமாக அவரது பேச்சு மாறியது. இதுதொடர்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வந்தார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை (மார்ச் 6) வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.