இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு - சவால் விடுத்த அண்ணாமலை..!

கரூர் பொதுக் கூட்டத்தில் ''நீ சரியான ஆளாக இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப்பார்… நீ சொல்லிப்பார்… இல்லை நீ சொல்லித்தான் பாரேன்''என அழுத்தம் திருத்தமாக சவால் விட்டிருந்தார் அண்ணாமலை..
இந்நிலையில், திமுக ஐடி விங்க் அண்ணாமலையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் #GetOutModi 'கெட் அவுட் மோடி' என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
எக்ஸ்தளத்தில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது. மறுபுறம் பால்டாயில் பாபு என்கிற ஹேஷ்டேக்கை பாஜக ஆதவராளர்கள் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.
திமுகவுக்கு கெடு விதித்து திமுகவினருக்கு சவால் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுகுறித்து அவர், ''இன்று சமூக ஊடக வலைத்தளங்களில் பார்க்கிறேன். ஒரு பக்கம் 'கெட் அவுட் மோடி' என்று வருகிறது. இன்னொரு பக்கம் 'ஃபால்டாயில் பாபு' என்று ஒரு தரப்பு பகிர்கிறது. இரண்டு தரப்பினருக்கும், சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஐடிவிங் அனைவரும் சேர்ந்து முக்கி முக்கி இன்று இரவு வரை எவ்வளவு ட்வீட் போடுவீங்களோ போடுங்கள். நாளைக்கு காலையில் 6:00 மணிக்கு என்னுடைய சமூக வலைதளத்தில் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று நான் பதிவு செய்கிறேன். எவ்வளவு போகிறது என்று பார்ப்போம்.
நான் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். நேத்து நைட் ஆரம்பித்தாய். நாளைக்கு காலை 6 மணி வரை நான் உனக்கு நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம், திமுக ஐடி விங்க் உள்ளிட்ட எல்லோரையும் பயன்படுத்தி 'கெட் அவுட் மோடி' என்று எவ்வளவு ட்வீட் போட முடியுமோ போட்டுக் கொள். நாளைக்கு காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று பதிவிடுகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து 'ஸ்டாலினே வெளியே போ'. ஆட்சி சரியில்லை, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்களே நீங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று என்னுடைய முகநூலில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் போட்ட ட்வீட்டை மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.
ஜெயிக்கப்போவது 'கெட் அவுட் மோடியா?', 'கெட் அவுட் ஸ்டாலினா?' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.