1. Home
  2. தமிழ்நாடு

இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு : கருமை நிற பேனா பயன்படுத்த வேண்டும்... 9 மணிக்குப் பிறகு வந்தால் அனுமதி இல்லை..!

1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். 

இந்தக் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  • விண்ணப்பதாரர்கள் கருமை நிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (கருப்பு மை பந்து புள்ளி பேனா) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகை புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்த பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள் காலை 9 மணிக்கு வழங்கப்படும். தொடர்ந்து விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.
  • 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் 12.45 மணிக்கு முன்பு தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் (ஹால் டிக்கெட்) தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும்.
  • தேர்வர்கள் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
  • தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் குறிப்பிட்ட பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும்.
  • ஓ.எம்.ஆர் விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றை சரிபார்த்து, விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தங்களுடைய வினாத்தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு, கையொப்பமிடவேண்டும்.
  • தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படாது.
  • ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள் உள்ளேயோ அல்லது வெளியிலோ விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்த முறைகேட்டிலும் ஈடுபட்டாலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like